ராஞ்சி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக திவாகர் மற்றும் தாஸ் ஆகியோர் உள்ளனர்.
இருவரும் எம்.எஸ் தோனியின் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க அவருடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்நிலையில் இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி எம்.எஸ் தோனி ராஞ்சியில் புகார் அளித்து இருந்தார். கடந்த 2021 ஆம் அண்டு இருவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த போதும் தன் பெயரில் இருவரும் தொடர்ந்து கிரிக்கெட் அகாடமிகளை திறந்ததாக தோனி தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.
ஒப்பந்த ரத்துக்கு பின்னரும் தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளைத் தொடர்ந்து திறந்து 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தோனி புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் திவாகரும், தாசும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.