
எங்கெங்கு காணினும் ஏகாந்தமாய் ஒளிரும் ஒளிப்பூவே, உலகாளும் உயர்தனிச் செம்மொழிப் பூவே, உனது ஆதி அந்தம் யார் அறிவார்? முழுமையாய் அறிந்தோர் யார் இங்கே ? எவருண்டு புவிதனில் ? தோண்டத் தோண்ட நீரூற்றாய் பேரூற்றாய்
சிந்துவெளி வைகை வெளி பொருநை வெளி நோக்கும் திசையெல்லாம் நின் நிலைபேறானச் செவ்வியல், யாதுமாகி ஆள்கிறாய் வையத் தலைமை மொழியாய் மண்ணில் மக்கள் நெஞ்சில். நிலமற்றோர் வேரற்றோர் விதைகளற்றோர் வளமற்றோர் புலமற்றோர் உருவமற்றவர்களின் போலி பிதற்றல்கள்முன் உலகினை
உயிர்ப்பாய் இயக்கிடும் உன்னத உயர்மொழி நீயே
இசை மொழியாய் திசை மொழியாய் விசை மொழியாய் அசை மொழியாய் தனித்து இயங்கிடும் பசை மொழியாய் பாரினில் உள்ள உயிர்களை உயிர்த்திட தோன்றிய பைந்தமிழே! எத்திசையில் இருந்து இடர்வரினும் வல்லினமாய் எழுவோம். அரணாய் அறமாய் ஆயுத எழுத்தாகி தடுத்தழிப்போம்.
நில மீட்டு வளமீட்டு மொழி மீட்டு வரும் நெடும் பயணத்தில் நிலத்தில் சோராது நிமிர்ந்து நிற்போம் வண்மொழியே நுண்மொழியே மென் மொழியே பண் மொழியே வற்றாது உன் மார்பில் ஊறிடும் முப்பால் பருகி குமரியைப் போல் வடக்கு நோக்கி எழுந்து நிற்போம்.
பாசிச சூழ்வினை எரித்து வெறுப்பை உமிழும் காவி வல்லூறுகளின் கதை முடிப்போம் பகையறுப்போம். பைந்தமிழ் மரகதப் புறாக்களாய் தமிழ்ப் பண்பாடிடுவோம்.
பேராசிரியர் கி. சதீஷ் குமார்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி , திருச்சி.
