அனைவர்க்கும் வணக்கம்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தினைத் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடிவருகின்றது. சிங்கப்பூர் அரசு. இவ்வாண்டு ஏப்ரல் ஐந்தாம்நாள் தொடங்கி மே நாலாம்நாள் வரையிலும் கொண்டாடுகிறது. இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் எல்லாம் சிறப்பான நிகழ்வுகளை அரங்கேற்றுவர். தமிழ்மொழி விழாக்கொண்டாட்டச் சோதியில் இவ்வாண்டும் கலந்துகொள்வதுதானே முறை. தாய்மொழியாம் தமிழினைக் கொண்டாட நமக்கெல்லாம் கசக்குமா என்ன !
கடந்த ஆண்டினைப்போலவே இவ்வாண்டும் முப்பது நாள்களுக்குக் கவிதை எழுதலாம் என்றே தோன்றியது. கடந்த ஆண்டு நிறையபேர் கவிதையெழுதிக் கொண்டாடியது மிக்க மகிழ்வான நினைவு.
*** முப்பது நாள்களும் முப்பது படங்களுக்குக் கவிதை எழுதலாம்.
*** கட்டாயமாக ஆங்கிலம் கலவாமல் எழுத வேண்டும். வடமொழியும் தவிர்த்துத் தனித்தமிழில் எழுதினால் கூடுதல் சிறப்பு.
*** கவிதை 8 வரி முதல் 15 வரி வரை இருக்க வேண்டும். கவிதை 8 வரிக்குக் குறைவாகவும் 15 வரிக்குக் கூடுதலாகவும் இருக்கக் கூடாது.

முகநூலில் இருக்கும் எல்லோரும் இணைந்து எழுதலாம்.
அடுத்தநாள் கவிதைக்கான படம் முதல்நாள் இரவில் பதியப்படும்.
ஒருவர் குறைந்தது 25 கவிதைகளாவது எழுதியிருந்தால்தான் போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர்.
முப்பதே நாளில் கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புகின்றீர்களா? வாங்க நாங்க இருக்கோம். இங்கே எழுதிப் பழகலாம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது முழுமையானதன்று. முயற்சியுடன் கூடிய முறையான பயிற்சியே திருவினையாக்கும். ஆதலால் வாருங்கள் கவிதை எழுதியெழுதிப் பயிற்சி எடுக்கலாம்.
நாளைக்கான கவிதைக்குரிய படம் இணைக்கப்பட்டிருக்கிறது. .அப்புறமென்னகவிதையை எழுதுங்கள் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் அன்புறவுகளே.
இங்ஙனம்
கல்கோனாமயி
சிங்கப்பூர்.
04.04.2025
