பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் ஊர்களில் ஊர்கல்வி குழு அமைத்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதியில், திண்ணை நூலகம் அமைத்து மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி, படைப்பாற்றலை வளர்க்கும் முயற்சிகளை செயல்படுத்தி வருகிறோம். சென்னை, மணலி புதுநகர் பகுதியில், எங்கள் வீட்டின் திண்ணையில் *திண்ணை நூலகத்தை நேற்று (6-05-2025, செவ்வாய்க்கிழமை) அமைத்தோம். மணலி புதுநகர் நூலக வாசகர் வட்டத்தைச் சார்ந்த அமுதா அவர்கள் இந்த திண்ணை நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். வாசகர் வட்டத்தின் தலைவர் நாகராஜன் அவர்கள், மணலி புதுநகர் குடியிருப்போர் சங்க தலைவர் சந்திரமோகன் அவர்கள், நகரின் முன்னணி ஆற்றல் தோழர் தீனதயாளன் அவர்கள், இளைஞர் சாம் அவர்கள், எனது இணையர் இசைமொழி தென்கனல் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் நூலகத்தின் பயன்பாட்டையும், வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி பேசினார்கள்.

குழந்தைகள் எளியமையாக படிக்கும் வகையில் அமைந்த கதைகள் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் ஆர்வத்துடன் எடுத்து படித்து மகிழ்ந்தனர். படித்ததை பகிர்ந்து கொண்டனர்.
இனி ஒவ்வொரு நாளும் திண்ணை நூலகம் செயல்படும். மாலை நேரத்தில் மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து உரக்க வாசிக்கலாம், குழுவாக வாசிக்கலாம், வாசித்ததை பகிரலாம், வீட்டுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம், பெற்றோரையும் படிக்க செய்யலாம்.

வாசிப்பு சுவையை உணரச் செய்வதற்காகவும், சிறந்த வாசகர்களாக, படைப்பாளிகளாக நமது பிள்ளைகளை உருவாக்கும் நோக்கில், நிறைய புத்தகங்களை படிப்பவர்கள், படித்த கதைகளை, செய்திகளை யார் நிறைய பகிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் வாரம் தோறும் பரிசு வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

அனைவரும் இந்த கோடை விடுமுறையில் விளையாட்டோடு வாசிக்கும் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பா.கா.தென்கனல் இசைமொழி
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு/புதுச்சேரி.
வீட்டு முகவரி: மனோன்மணி இல்லம், 17/22, மணலி புதுநகர், சென்னை -600103. பேசி- 9176195636.