கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். பள்ளிச் செயலர் பிரமிளா ரவிச்சந்திரன் முதன்மை ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் விழாவில் கற்கால முதல் கணினி காலங்கள் வரை உள்ள கல் ஆயுதங்கள் காதணிகள் நாணயங்கள் பணத்தாள்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. அதில்
சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் சுடுமண் காதணிகள் குறித்து பேசுகையில், சுடுமண் காதணிகள் என்பவை களிமண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து காதணிகளை செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான அணிகலன்களாகும். அவ்வாறு சுட்ட காதணி என்பதனால் சுடுமண் காதணிகள் எனப்படுகிறது.
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

பல ஆண்டுகளானாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் உள்ளது என்றார். கல்வி ஆலோசகர் சந்திரசேகர தவே சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிவியல் விழாவில் பங்கேற்றவர்களுக்கும் நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த நாணய சேகரிப்பாளர்கள் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் குணசேகரன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலருக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கினார்.











