
தேசிய நூலக வார விழா, இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் அறிஞர் கலைஞர் நிறுவிய வெள்ளி விழா போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், நூலக நன்கொடையாளர்களை பாராட்டும் விழா திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.



இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.
அவரது சிறப்புரையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவார்ந்த சமூதாயம் உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பொது நூலகங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தி வருகிறார்.
சென்னையில் மட்டும் நடைபெற்ற புத்தகத் திருவிழா, மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களிடையே இலக்கிய ஆளுமைகளை ஏற்படுத்த இளைஞர் இலக்கியத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் பெரியார் நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளியிலும் இதே போன்று ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்ட அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மக்களின் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.



நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும், இலக்கியத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்க பறிக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.



இவ்வாண்டு இளைஞர் இலக்கியத் திருவிழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சீதாலட்சுமி ராமசாமி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்றது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் நடைபெற்ற 10 போட்டிகளில் முதல் மூன்று நிலையை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூபாய் 5000, ரூபாய்4000, ரூபாய் 3000 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.



மாவட்ட மைய நூலகத்தில் இரண்டாம் தரத்தில் உள்ள பல்நோக்கு கூடத்திற்கு ரூ.2.5 இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பனை உட்கூரை (False Ceiling) சி.கே.ஆர் அறக்கட்டளை தலைவர் சி.கே. ராஜ்குமார் அவர்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நூலக பெரும் புரோலாக் இணைத்த வி.என். குருராஜன் அவர்களையும் பாராட்டி கேடயம் வழங்கினார்.



இவ்விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் நந்தலாலா வாழ்த்துரை வழங்கினார். வாசகர் வட்டத் தலைவர் வீ.கோவிந்தசாமி நன்றி கூறினார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் போட்டிகளில் நடுவர்களாக பங்காற்றியவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்திய டிசைன் ஓவியப்பள்ளி மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.













