• Home
  • இந்தியா
  • ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தல் நிறைவு.. 64.86 சதவீத வாக்குகள் பதிவு
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தல் நிறைவு.. 64.86 சதவீத வாக்குகள் பதிவு

Email :221

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், 73 பெண் வேட்பாளர்கள் உள்பட 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக, முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் செராய்கெல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான பன்னா குப்தா ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர்கள் மட்டும் அல்லாது, முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, ஜகனாத்பூர் தொகுதியில் களம் காண்கிறார். ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பி மஹூவா மாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ராஞ்சி, கோதர்மா, பர்கதா, போட்கா, ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, ஹாடியா, சீசாய், கும்லா, கார்வா உள்ளிட்ட 43 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.13) நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் வந்த அனைத்து புகார்களும் உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டன. மாலை 5 மணி நிலவரப்படி 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன” என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts