வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா மற்றும் முதுதமிழ் எழிலரசி எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி
அறக்கட்டளை நிறுவுதல் விழா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் சே.ச. தலைமையில் நடைபெற்றது தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் தொடக்கவுரையாற்றினார்.
இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ் படிக்கிற மாணவர்களுள் படைப்பிலக்கியத்தில் சிறந்து விளங்கும் இரண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ‘முதுதமிழ் எழிலரசி எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி அறக்கட்டளை’ நிறுவப்பட்டது. இத்திட்டத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி வழங்கினார்.

தொடர்ந்து தேசியக்கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.புவனேஸ்வரி, பாடல்கள், கவிதைகள், இலக்கிய மேற்கோள்கள், அனுபவங்கள் ஆகியவற்றை எடுத்துச்சொல்லி தமிழ் இலக்கியப்பரப்பின் பாடுபொருளும் தேடுபொருளும் குறித்து அமுதே தமிதே என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாணவி சங்கமித்ரா வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் மாணவா் சத்தீஸ்வரன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியை மாணவி ஸ்ரீநிதி தொகுத்து வழங்கினார். முனைவர் ஞா.பெஸ்கி, துறை ஒருங்கிணைப்பாளர் சி.பாக்கிய செல்வ ரதி உள்ளிட்ட பேராசிரியர்கள் தமிழ் அறிஞர்கள், தமிழார்வலர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் உள்ளிட்ட 286 பேர் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

வளனார் தமிழ்ப்பேரவை மாணவச் செயலர்கள் திவ்யஸ்ரீ, சஞ்ஜய், பொறுப்பாளர்கள் முனைவர் டே.வில்சன், முனைவர் சி.ஆரோக்கிய தனராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.












