திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காதி ஹண்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது புத்தூர் கிளை நூலக நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் நாணயவியல் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்கும் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஒரு கல்வித் தளமாகும் என்றார்.

சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் காதி ஹண்டி பணத்தாள் குறித்து பேசுகையில், காதி ஹண்டிகள் உறுதிமொழி பணத்தாள்களாக காதி துணிக்கான பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்தப்பட்டன. கையால் நெய்யப்பட்ட துணி விற்பனை நிலையங்கள் காதி பண்டாரில் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். பல வண்ணங்களில் மதிப்புகளில் வடிவமைப்புகளில் காதி ஹண்டி
காணப்பட்டன. காதி துணியை நூற்கும் ஏழைப் பெண்களுக்காக மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்புக்காகவும்
காதி ஹண்டி நினைவு கூறப்படுகின்றன. இதைப் போல பல வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க செயலர் குணசேகரன், வரலாற்று துறை முதுகலை மாணவர் அரிஸ்டோ, சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், நாணயங்கள் சேகரிப்பாளர் முத்து வீரப்பன், மன்சூர் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.











