கடந்த 29.11.2024 ஆம் நாள் வெள்ளிக் கிழமை, இரவு 7.00 மணி அளவில் பினாங்கு சியார்ச்சி டவுன் அலாம் இண்டா நிகழ்வரங்கில் தயாளன்குமார் தனலக்குமி இணையருக்கு இனிதே தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி தமிழ்த்திருமணம் நடத்தி வைத்தேன்.

நான் நடத்தும் திருக்குறள் தமிழ்த்திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளில் உடைமை என இடம்பெற்றுள்ள பத்து அதிகாரத் தலைப்புகளையும் அழகுற பதிவுசெய்ய வேண்டும் என்றே வேண்டுகோள் விடுப்பேன். ஆரிய சப்த அடிகள் முறைப்பாடு, தீ வலம் வருதல் முதலானவற்றை அழைப்பிதழ்களில் குறிப்பதைத் தவிர்த்து திருக்குறள் தமிழியல் அடையாளங்களைக் குறித்திடல் வேண்டும். தமிழர் தமிழில் இன்பியல் துன்பியல் நிகழ்ச்சிகளை நடத்துதல் வேண்டும்.
இனிய தமிழில் புரியும் வண்ணம் வாழ்வியல் நெறிகளைச் சொல்லி திருமணம் நடத்தினால் வந்தவர் அனைவருக்கும் புரியும்.

தமிழர் தாய்மொழியாம் தமிழில் தம் இல்ல நிகழ்ச்சிகளை நடத்துதலே நன்று.
பினாங்குத் தீவில் நான் நடத்திய முதல் திருமணம் இதுவே. வந்தவருள் சிலர் என்னிடம் திருமணம் மிகச் சிறப்பு எனப் பாராட்டினர். ஒருவர் மற்றொருவரிடம் தமிழ்க்கல்யாணமா இது, சிறப்பாக இருக்கிறதே.. எனப் பேசிக் கொண்டிருந்தார். மணமக்களும் பின்னர் வந்தவர் அனைவரும் பாராட்டியுரைத்தனர் எனச் சொல்லி எனக்கு நன்றியுரைத்தனர்.
மணமக்கள் வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துவோம். திருக்குறள் தமிழ்த்திருமணம் மேலும் பரவிட முனைந்துழைப்போம்.
இரா.திருமாவளவன்.













