செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் 2024 கலை விழாப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற தாவரவியல் துறையினருக்கு பாராட்டு.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2024 நுண்கலை விழா இரண்டு நாட்களாக நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தொலைக்காட்சிப்புகழ் பாடகர் இர்வின் விக்டோரியா மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் கோபால்ராவ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி கவின் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு .
நிறைவு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ்
வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்து சிறப்பு செய்தனர். ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், அலுவலகர்கள் சங்கத் தலைவர் இளங்கோ சேவியர் ஜோதி மாணவர் பேரவைத்தலைவர் விமல்ராஜ் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.

திரைப்பட நடிகர் அட்டகத்தி தினேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். தன்னைப் பற்றிய ஒரு கேள்விக்கு அட்டகத்தி என்றோ கெத்து என்றோ அழைப்பது திரையுலகம் தந்த முகம். நிலையானது என்னுடைய பெற்றோர் வைத்த தினேஷ் என்ற பெயரே. என்னுடைய பெற்றோர் வைத்த தினேஷாக அழைக்கப்படவே விரும்புகிறேன் என்றார். கல்லூரி அடையாள அட்டையோடு வெளி உலகில் அறிமுகமாகிற மாணவர்களாகிய நீங்கள் கல்லூரியின் மதிப்பீடுகளை தன்னகப்படுத்திக் கொண்டு சுயமாக சமூகத்தில் அடையாளப்பட வேண்டும். மாதச்சம்பளம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் செல்வதே இலக்கு என்றில்லாமல் இலக்கைப் பெரிதாக்கிக் கடுமையாகவும் திறமையாகவும் உழைத்து வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான போட்டியில் தாவரவியல் துறை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. சாம்பியன்ஷிப் பெற்ற துறையினருக்கும், போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அருள்தந்தையர்களும் சிறப்பு விருந்தினர்களும்
கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.
நிறைவில் கவின் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி நன்றியுரை ஆற்றினார்.

மன்றத்தின் மாணவர் செயலாளர் சஞ்செய் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இன்டெப் 2024 கலைவிழாவைக் கல்லூரி நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவா் வெர்ஜின் பிரேகா, முனைவர் அருள் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, நடத்தியமை பலரது பாராட்டையும் பெற்றது.
– ஜா.சலேத் & அ.விமல் ஜெரால்டு












