இந்திய அரசின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர்களின் சேவை மற்றும் வேலைவாய்ப்பின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒழுங்குபடுத்தும் பல்வேறு தொழிலாளர் சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துவதன் மூலம், அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா ஆகிய இரு துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல், நலனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றின் வழியாக, நாட்டின் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் கண்ணியத்தையும் மேம்படுத்துவதில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது.

அதன்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் தேசிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.


அவர்களின் வேலைவாய்ப்பை உகந்த முறையில் கண்டறிவதற்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்களை அவர்களுக்கு வழங்குவதற்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பயனுள்ள முகாம்களை நடத்த பயிற்சியளித்து வருகிறது.

இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் எளிதாக சென்றடைகின்றன. 16 முதல் 59 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் (விவசாயிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள்) பயன் பெறுவர். பதிவுக் கட்டணம் முற்றிலும் இலவசம். விபத்துக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் 14 வகையான நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் விபத்து மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறவும் உதவுகிறது.

அதன் அடிப்படையில், மதுரை மத்திய மண்டல அதிகாரி டாக்டர் பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்ராமிக் மித்ரா என்று அழைக்கப்படும் தொழிலாளர்களின் நண்பர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றார். தொழிலாளர்களின் நண்பர்கள் (ஸ்ரமிக் மித்ரா)பல்வேறு கிராமங்களில் ஏழை எளிய மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக விபத்து காப்பீடு மருத்துவ காப்பீடு போன்ற பல்வேறு திட்ட பணிகளை பதிவு செய்து கொடுப்பதோடு ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார பகுதிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலோடும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வழிகாட்டுதலோடும் ஊராட்சி செயலர் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களின் பங்களிப்போடும் விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம்களை ஜெயச்சந்திரன் (தொழிலாளிகளின் நண்பன்) சிறப்புற நடத்தி வருகிறார். இம்முகாம் சிறப்புற நடக்க மதுரை மத்திய மண்டல அதிகாரி டாக்டர் பிரபாகரன் ஒவ்வொரு நாளும் தொழிலாளிகளின் நண்பர்களை நெறிப்படுத்தி ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
இம்முகாமில் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான நபர்கள் பலன் பெற்று வருகின்றனர். இந்த முகாமில் ஏராளமானோர் தாமாக முன்வந்து பதிவு செய்து செல்கின்றார். இம்முகாம் 2027 மார்ச் மாதம் வரை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












