தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறையில் விளம்பரக் கலை சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா!
திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சார்பாக, முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கான விளம்பரக் கலை என்னும் மதிப்புக் கூட்டுப்பாடத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழாய்வுத் துறை இணைப்பேராசிரியர் முனைவர் டே. வில்சன் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு விளம்பரக் கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், பிளிங்கிட் போன்ற நவீன தொழில்நுட்பச் சாதனங்களை உருவாக்கிக் சாதனை படைத்த மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. பாக்கிய செல்வரதி முன்னிலை வகித்து, மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கல்லூரி பணிமுறை இரண்டின் துணை முதல்வர் முனைவர் ஆக்டோவியா அந்தோணி சேசம்மாள் பங்கேற்றுச் சிறப்பித்தார். விளம்பரக் கலையின் நுட்பங்கள், அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழ்த்துறை பேராசிரியர்களும் மாணவர்களும் கணினி அறிவியலிலும் சிறந்து விளங்க வேண்டும் என்கிற கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக அவர் உரை அமைந்தது.
முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா சித்திகா வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் இ. யோகராஜ் நன்றியுரையாற்றினார்.முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி மீனா ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் முனைவர் இரா. முரளிகிருட்டினன், திருஇ..யோகராஜ் உள்ளிட்ட பாடப்பொறுப்பாளர்கள் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












