திருத்தவத்துறைத் திருவள்ளுவர் கழகமும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நாடுகாண் குழுவும் இணைந்து தெய்வச் சேக்கிழார் விழாவை இரண்டு நாட்கள் (20,21/05/2026) இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடினார்கள். முதல் நாள் நிகழ்வில் திருவள்ளுவர் கழகத்தின் 89 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பரிசு வென்ற மாணவர்களுக்கு, இலால்குடி நகர் மன்றத் தலைவர் ப.துரைமாணிக்கம் அவர்கள் தலைமையேற்க, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலின் செய்த அலுவலர் மா.சுந்தரி அவர்களின் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட மாண்புமிகு சிறப்பு நீதிபதி சி.கார்த்திகா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.தொடர்ந்து திருக்குறள்வேள் G.வரதராசனார் அரங்கம் நடைபெற்றது.

இவ்வரங்கில் பெரியபுராணம் வலியுறுத்தும் நெறி என்கின்ற தலைப்பில், இரா.மாது அவர்கள் தலைமையில் பாங்கறி பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் திருத்தவத்துறைத் திருவள்ளுவர் கழகம் வழங்கும் பெருந்திருப் பிராட்டியார் அமுதத் திரட்டு நூல் வெளியீடு, விருது மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிலக்கிழார் சேது.அரவிந்த் அவர்களின் முன்னிலை வகிக்க , திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் தலைமையேற்று விருகளை வழங்கியும், நூலினை வெளியிட்டும், ஆசியுரை வழங்கினார்கள்.நூலின் முதல் பிரதியை தருமையாதீனப் புலவர் மு.வைத்தியநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சிறந்த ஓதுவாருக்கான திருமுறைச் செல்வர் என்னும் விருதினை திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் ஓதுவார் ப.முருகானந்தம் அவர்களுக்கும், சிவாச்சாரியாருக்கான திருவருட்செல்வர் என்னும் விருதினை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் த.விஸ்வநாதன் அவர்களுக்கும்,
சமயத் தமிழ்த் தொண்டர்கான தெய்வத் தமிழ்ச் செல்வர் என்னும் விருதினை தருமையாதீனப் புலவர் மு.வைத்தியநாதன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர். விழாவின் நிறைவாக யானை வாகனத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.












