காவேரி மகளிர் கல்லூரி(த) தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் தொடக்க விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் தண்ணீர் அமைப்பு மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் செயலர், இயற்கை ஆர்வலர், பேரா.கி. சதீஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ் இனிய நிகழ்விற்கு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் மு. அனு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பேரா. ச.இராமலட்சுமி அவர்கள் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் தம் சிறப்புரையில், ‘புல்வெளிக்காடுகள் உயிர்ப்புடன் இருந்தால் சூழலியல் செழிப்பாக இருக்கும். பெண்கள் தான் சூழலியலை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மரபணு மாற்று உணவுப் பயிர்கள், மரபணு மாற்று உணவுப் பண்டம் எது என்பதை நாம் தெளிவுடன் தெரிந்து தின்பண்டங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மரபணு மாற்று நெல்மணிகள் மரபணு மாற்று விதைகளை தொடர்ந்து நாம் புறக்கணிக்க வேண்டும் அது போன்ற பயிர்கள் நிலத்திற்கும் சூழலியலுக்கும் உடலுக்கும் கேடு தரும் என்பதை மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்லியாக வேண்டும் என்றார். காலந்தோறும் பெண்களே சூழலியலுக்கு நெருக்கமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கிற இயற்கையின் தூதராக வழங்குகின்றார்கள்,தாய் வழிச் சமூகத்தின் அடையாளம் பனை. பனை விதைப்போம் தமிழர் பண்பாட்டை மீட்போம்’ என்றார். பெண்கள் களமிறங்கி சூழலியல் களத்தில் செயல்படுகின்ற பொழுது இன்னும் இந்தச் சமூகம் விழிப்புணர்வு அடையும், வளர்ச்சி பெறும் எனவே பல்வேறு துறைகளில் சாதிக்கிற பெண்கள் சூழலியல் களத்திலும் களம் இறங்கினால் இயற்கை மீண்டும் பெருமகிழ்ச்சி அடையும். எல்லா பேரிடர் காலங்களிலும் பெண்களே களமிறங்கி துணிவுடன் மக்களை உயிர்களை வளங்களை பாதுகாத்திருக்கிறார்கள் எனவே இயற்கையை பாதுகாக்க நாம் களமிறங்க வேண்டும் என்று உரையாற்றி மாணவியர் மத்தியில் பெரும் உந்துதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இர. கீர்த்தனா அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.














