முழு சந்திர கிரகணம் பார்க்க ஏற்பாடு!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி மாவட்ட குழு சார்பில் நாளை (செப்.7) பல்வேறு இடங்களில் மாலை 6 மணி முதல் சந்திர கிரகண நிகழ்வை வானியல் திருவிழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர். 7-ம் தேதி இரவு 9.57 மணிக்கு தொடங்கி 8-ம் தேதி அதிகாலை 1.26 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. சரியாக 11.01 முதல் 12.23 மணி வரை, இடையில் முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது.
சந்திர கிரகணத்தில் எந்த கதிர்வீச்சும் இல்லை. அதை வெறும் கண்களால் பார்க்கலாம். கிரகணத்தின் போது உணவு உண்ணுதல் உள்ளிட்ட அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். அடுத்த சந்திர கிரகணத்தை 3 ஆண்டுகள் கழித்து 2028 டிசம்பரில் தான் காண முடியும். நாளை நடைபெறும் நிகழ்வை தூய வளனார் கல்லூரி ஸ்டீபன் ஹாக்கிங் இனோவேஷன் கிளப், தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆடிபர்ட் அறிவியல் மன்றத்துடன் இணைந்து தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருமண்டபம், திருவெறும்பூர், இலால்குடி, திருவெள்ளறை, வையம்பட்டி, மணப்பாறை, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அறிவியல் இயக்கம் ஏற்பாட்டில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கும் திரையிட்டு பட காட்சி மூலம் விளக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
வானில் தோன்றும் இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
நன்றி.














