காட்டூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே, காட்டூர் அம்மன் நகர் கிழக்கு, “ராஜ் நகர்” நலச் சங்கத்தின் 76 ஆவது குடியரசு தினக் கொடியேற்றுதல் நிகழ்ச்சி இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு V.ஏழுமலை தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.துரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து – சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் அம்மன் நகர் கிழக்கு – இராஜ் நகர் பகுதியில், அன்றாடம் குப்பைகளைச் சேகரிக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பத்து பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அவர்களது சிறப்பான இடையறாத சேவைக்கு, நகர் நலச்சங்கம் சார்பில் மனப்பூர்வமான நன்றியும் – பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சிலரைப் பேசவைத்து அவர்கள் கூறிய கருத்துகளும் அப்பகுதிவாசிகளால் கேட்கப்பட்டன.

மட்கும் மற்றும் மட்காத குப்பைகளைத் தனித்தனியே தரம்பிரித்து தருவதற்கு, மிகுந்த முக்கியத்துவம் தருமாறு தூய்மைப்பணியாளர் ஒருவர் பகுதிவாசிகளிடம் கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. திரு SRP. வெங்கடசாமி நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.














