ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம் நிகழ்வில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கல்லூரியின் முன்னாள் இயற்பியல் துறை மாணவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. கல்லூரி அதிபர் அராள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச. வரவேற்புரையாற்றினார்.

தூய வளனார் கல்லூரி குறித்த மேனாள் குடியரசு தலைவரின் பதிவுகளும், கல்லூரிக்கு பலமுறை அவர் வருகை தந்த நிகழ்வுகளின் ஒளிப்படங்களும் காட்சியாகத் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. வாழ்த்துரை வழங்கினார்.

இணை முதல்வர் முனைவர் த.குமார், இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கிஷோர் மற்றும் விஜயலட்சுமி உரையாற்றினர்.
மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் கே.இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அவர் உரையில், அப்துல் கலாமின் நினைவலைகளையும், இளைஞர்களுக்கு அவர் விடுத்துச் சென்ற விழுமியங்களையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் இயற்பியல் துறை சிறப்பாகச் செய்திருந்தது.












