திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வு!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர்களிடையே தமிழ் மரபின் வளமையையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு நடைபெற்றது.
அரசு சார்பாக அமைக்கப்பட்டிருந்த 12 காட்சியரங்குகளை மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’ மற்றும் ‘தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் மையப்படுத்திக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் உரை நிகழ்த்தினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியரும், மாபெரும் தமிழ்க்கனவுத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இரா.குணசேகரன் திட்ட விளக்க உரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அதியமான் கவியரசு நோக்கவுரையாற்றினார். மாபெரும் தமிழ்க்கனவு காணொளி ஒளிபரப்பப்பட்டது.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் முனைவர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வும் தமிழர் தொன்மையும் என்கிற பொருண்மையில் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் தமிழகத்தைப் பொறுத்தவரை அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆய்வுகள் சிறிய அளவிலான ஆய்வுகளாக அமைந்திருந்தன. கீழடியில் கிடைத்த தொல்லியல் எச்சங்களே வரலாற்றைக் கட்டமைக்க பேருதவியாக இருக்கின்றன. 102 அகழாய்வுக் குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை வெளிப்படையாக வெளியிட்டதே கீழடி ஆய்வு மக்கள்மயப்பட்டதற்கு அடிப்படைக் காரணம். மொழி வரலாற்றை, இன வரலாற்றை அறிய இந்தத் தொன்மைகள் ஆதாரமாக அமைகின்றன. மாணவர்கள் இதை உள்வாங்கித் தொல்லியல் துறையில் ஆர்வமும், அறிவும் பெற்றவர்களாக உருவாகிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது உரைக்குப் பிறகு மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. உரையாற்றிய மற்றும் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் க.இராதாகிருஷ்ணன், கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் க.அங்கம்மாள் மற்றும் பேராசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் முனைவர் ஜா.பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். செயின்ட் ஜோசப் கல்லூரி, புனித சிலுவைக் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, தேசியக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சார்ந்த 987 மாணவர்கள் பேராசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.













