திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் “உயிர்தொழில்நுட்பவியல் தேசிய மாநாடு”.
திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), உயிர்தொழில்நுட்பத் துறை சார்பில் “BIO-VISION–2026: Biotechnological Innovations for Vitalization” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடக்க விழா, உயிர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் முனைவர் வி. ஸ்வப்னா அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இம்மாநாடு, சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உயிர்தகவலியல் ஆகிய துறைகளில் உயிர்தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. இதில் 67 கல்லூரிகளைச் சேர்ந்த 90 துறைகளிலிருந்து சுமார் 400 பங்கேற்பாளர்கள், 16 மாவட்டங்கள் மற்றும் 4 மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர்.
இந்த மாநாடு, கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளியின் உயிர்வேதியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சி. அய்யாவு அவர்கள் முக்கிய உரையாற்றி, சமூக மற்றும் சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் உயிர்தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விளக்கினார். மேலும், ஜெய்ப்பூர் விவேகானந்தா உலக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் முகிலன் மகேந்திரன், கோயம்புத்தூர் KMCH ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி முனைவர் ஜி. வேல்முருகன், மற்றும் தென் கொரியாவின் Sugentech Inc. நிறுவனத்தின் தென்னாசிய வணிக வளர்ச்சி மேலாளர் முனைவர் பத்மநாபன் மோகனன் ஆகியோர் சிறப்பு உரைகள் வழங்கி மாநாட்டை சிறப்பித்தனர்.
மாநாட்டின் சிறப்பு அம்சமாக, மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய Conference Proceedings வெளியிடப்பட்டது. அதேபோல், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட “Insectifica” என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பூச்சிகளை அடையாளம் காணும் கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுதலாக, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான உயிர்தொழில்நுட்ப ஆய்வக கையேடும் வெளியிடப்பட்டது.
மாநாட்டில் வாய்மொழி மற்றும் போஸ்டர் ஆய்வுக் கட்டுரை விளக்கங்கள் நடைபெற்றன. மேலும், நான்கு பிரிவுகளில் பேராசிரியர்களுக்கான சிறந்த ஆராய்ச்சியாளர் விருதுகள், சிறந்த முன்னாள் மாணவர் விருது, மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் சிறப்புத் விருதுகள் வழங்கப்பட்டன.
மாநாட்டின் நிறைவு விழா, இணை முதல்வர் முனைவர் த குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த வாய்மொழி, போஸ்டர் மற்றும் ஐடியாதான் (Ideathon) ஆகியவற்றுக்கான பரிசுகள் வழங்கப்பட்டு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநாட்டின் அமைப்பு செயலாளர் முனைவர் ஆ. எட்வர்ட் நன்றியுரை வழங்கினார்.
இந்த மாநாடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் தூய வளனார் கல்லூரியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எதிர்கால கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் சிறப்பாக நிறைவடைந்தது.














