தமுஎகச – மலைக்கோட்டைக் கிளை தொடக்க விழா.
தமுஎகச – மலைக்கோட்டைக் கிளை தொடக்க விழா நேற்று (16.05.25 வெள்ளி மாலை) முதல் கூட்டம் பூங்காவில் இயற்கையான சூழலில் மிகவும் சிறப்பாக நடந்தது. திருச்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் சீத்தா வெங்கடேஷ், கவிஞர் திருவைக் குமரன், பேராசிரியர் கவிஞர் பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி, ஆசிரியர் செசிலி, கவிஞர் சுமித்ராதேவி, பிரசன்னா, சந்திரா, இளையராஜா, கவிஞர்.கோ.செல்வராஜ், வேதநாயகம், ஒளிக் கலைஞர் சதீஷ், தாரணி, உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். வாழ்த்துரை ஆற்றிய மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், கவிஞர் திருவைக் குமரன் இருவரும் தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்து தமிழ் திசை நாளிதழைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் “நமக்குத் தேவை சூழல் விழிப்புணர்வு!” என்ற தலைப்பில் பேசிய தனது சிறப்புரையில் பிளாஸ்டிக் பயன்பாடு முதல், பல்லுயிர் நேயம் வரை பல்வேறு கருத்துகளை பார்வையாளர்களின் கருத்துகளோடும் கேள்விகளோடும் கலந்து பேசினார்.

அவர் தனது உரையில் எதிர்காலக் கல்வி முறையே சுற்றுச் சூழலைக் காப்பதற்கான பாடத் திட்டத்துடன்தான் இருக்கும் என்றும், சூழலைக் காப்பதில் தனி நபர்களின் பங்கை விட அரசாங்கம், நிறுவனங்களின் பங்குதான் அதிகம் இருக்க வேண்டும் என்றும், சூழல் அழிப்பை எதிர்த்து மக்கள் தயங்காமல் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

பார்வையாளர்களின் கேள்விகள், கருத்துகள், புதிய நண்பர்களின் அறிமுகம், வியப்பு இப்படி கலவையாக நிகழ்வு அமைந்தது. தலைவர் இளங்குமரன், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் சந்திரா என்று பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.














