உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா!
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சிராப்பள்ளி பொன்மலை பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமை தாங்கினார்.
இதில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாரணர், சாரணியர் அமைப்பின் ரயில்வே முருகானந்தம், மோகனசுந்தரம், கதிர்வேல், குமரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இயற்கை வளங்களான நீர், காற்று, மண், காடுகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைப் பொறுப்பு என்பதை நிகழ்ச்சியில் வலியுறுத்தினர்.
மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க அதிகளவில் மரங்களை நட்டு வளர்ப்பதும், மழைநீரைச் சேமிப்பதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பதும் அவசியம் என எடுத்துரைக்கப்பட்டது.
“இயற்கையைக் காப்போம் – பூமியைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.












