அந்தநல்லூர் ஒன்றியத்தில் உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்!
அந்தநல்லூர் ஒன்றிய கல்வித் துறையின் சார்பில் உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் ஸ்ரீரங்கம் தேவி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உற்சாகமாக நடைபெற்றது.

விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் ஜாக்குலின் ஸ்டெல்லா, அனைவரும் ஆட்டிச விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கச் செய்து, குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினார்.
மாவட்ட DIET முன்னாள் முதல்வர் எஸ். சிவகுமார், நிகழ்வில் உரையாற்றி, உலக ஆட்டிச தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது என்றும், 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.
இயன்முறை மருத்துவர் அம்சா தேவி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். பெற்றோர்கள் அவர்களின் தனித்துவங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், ஆட்டிசம் பாதித்த சிறப்பு குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உரிமைகள், அவர்களுக்கு தேவையான ஆதரவுகள் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் அதிகரிக்க வேண்டும் என்றார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா, சமூகத்தில் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
விழா நிறைவில் பெற்றோர் ஜெயபாரதி நன்றி கூறினார்.












