• Home
  • தமிழ்நாடு
  • மாவட்டந்தோறும் ஒரு பல்லுயிர் சூழலியல் பாதுகாப்பு மண்டலத்தை அரசு அறிவிக்க வேண்டும். தண்ணீர் அமைப்பு கோரிக்கை.
தமிழ்நாடு

மாவட்டந்தோறும் ஒரு பல்லுயிர் சூழலியல் பாதுகாப்பு மண்டலத்தை அரசு அறிவிக்க வேண்டும். தண்ணீர் அமைப்பு கோரிக்கை.

Email :109

அண்மையில் தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டப்பட்டி பகுதியை பல்லுயிர் பாரம்பரிய மரபு மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தண்ணீர் அமைப்பின் சார்பாக வரவேற்கிறோம்.  தமிழ்நாட்டில் அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட முதல் பல்லுயிர் சூழலியல் மண்டலம் அரிட்டாபட்டி என்பது வரவேற்புக்குரியது.

இப்பகுதியானது ஏழு சிறு சிறு குன்றுகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அடுக்குத் தொடராக அமைந்துள்ள பல்லுயிர் மண்டலமாகும், 72 ஏரிகள் 200க்கும் மேற்பட்ட இயற்கை நீரூற்று கொண்ட குளங்கள், தடுப்பணைகள் கொண்ட பகுதியாகும்.  பாண்டியர் காலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஏரிகள் இப்பகுதியில் உள்ளது.
250 ற்கும் மேற்பட்ட பறவைகள் அரிய வகை ராசாளி பருந்துகள், எறும்புத் திண்ணிகள் ஊர்வன அரிய வகை உயிரிகள் வாழக்கூடிய பகுதி இப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியை தமிழ்நாடு அரசு பல்லயிர் பாரம்பரியத் தலமாக அறிவித்திருப்பதை பெரும் மகிழ்ச்சியோடு நாங்கள் வரவேற்கிறோம் பாராட்டுகின்றோம். மட்டுமல்லாது இப்பகுதி சமணர்களுடைய சிற்பங்கள் தீர்த்தங்கரர் உடைய புடைப்புச் சிற்பங்கள் சமணர்களுடைய கற்படுக்கைகள் அருகில் தமிழ் எழுத்துக்கள் தமிழி, தமிழ் பிராமி எழுத்துக்கள் வட்ட எழுத்துக்கள் கொண்ட அரிய பண்பாட்டு மரபு சார்ந்தப் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

இங்கிருக்கின்ற சமணற் கற்படுக்கைகள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் மட்டுமல்லாது நீர்நிலைகள் சார்ந்த விவசாய நிலங்கள் உணவு குடிமக்கள் வாழிடமாக அவர்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்ற ஒரு வளமான பகுதியாகும். எனவே இப்பகுதி கனிம வளங்களை மிகுதியாக கொண்ட பகுதியாகவும் காணப்படுகிறது.

எனவே இப்பகுதியை ஒருபோதும் கனிம வளங்களை சுரண்டுவதற்கு தனியாருக்கோ வேறு தனி நபருக்குமோ அனுமதி கொடுக்கக் கூடாது. ஒரு சிறு பகுதியை நாம் வழங்கினாலும் அது அங்கிருக்கின்ற பல்லுயிர் வாழிட உயிர்களுக்கு உழவுக்குடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் எனவே தனியார் நிறுவனங்களுக்கோ அரசுக்கோ அந்தப் பகுதியை தாரை வார்க்கக் கூடாது. அங்கிருந்து ஒரு சிறு கல் கூட உடைக்கப்படவோ எடுக்கப்படவோ அகற்றப்படவோ கூடாது என்பது தண்ணீர் அமைப்பினுடைய கோரிக்கையாகும்.

தமிழ்நாடு அரசு இதேபோல மாவட்டம் தோறும் சூழலியல் பாதுகாப்பு மண்டலங்களை
உருவாக்கித் தர வேண்டும்.
மாவட்டம் தோறும் அரிய வகை பறவைகள் விலங்குகள் அரிய வகை பாலூட்டிகள் உயிரிகள், பூச்சிகள் இருக்கக்கூடிய பகுதியை கண்டறிந்து ஆய்வு செய்து சமூகக் காடுகள் புதர்க் காடுகள் மலைக் காடுகள் இவற்றையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும், என்கின்ற நோக்கில் மாவட்டம் தோறும் பல்லுயிர் சூழலியல் மண்டலங்களை உருவாக்கித் தர வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படுகின்ற பொழுதுதான் நீர்நிலைகள் நீர்நிலைகள் சார்ந்த வேளாண்மை, அதை சார்ந்த பல்லுயிர்கள் வளங்கள் பாதுகாக்கப்படும். எனவே தமிழ்நாடு அரசு அரிட்டாப்பட்டியை அறிவித்தது போல மாவட்டம் தோறும் ஒரு பல்லுயிர் சூழலியல் மண்டலங்களை உருவாக்கித் தர வேண்டும் என்று தண்ணீர் அமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற சூழலியல் மண்டலங்கள் எதிர்கால தலைமுறைக்கு நீர் ஆதாரங்கள் வாழ்வாதாரங்கள் வளங்களை பாதுகாப்பதற்கு இது போன்ற சூழலியல் மண்டலங்கள் துணை புரியும்.
இயற்கை வளங்களை பாதுகாப்பதன் வாயிலாக ஒரு பொருளாதாரத் தன்னிறைவு மிக்க மாநிலத்தை உருவாக்க முடியும் எனவே தனிமனித மேம்பாட்டிற்கும் சமூகம் மேம்பாட்டிற்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டந் தோறும் பல்லுயிர் சூழலியல் மண்டலங்களை (Bio-Diversity Hot Spot) ஆராய்ந்து தமிழ்நாடு அரசு உருவாக்கித் தர வேண்டும் என்று  வேண்டுகிறோம்.

நேற்றைய தினம் தண்ணீர் அமைப்பினுடைய செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் அரிட்டாப்பட்டி பகுதியை நேரில் சென்று அப்பகுதியை கண்டறிந்து ஆய்வு செய்து வந்துள்ளார். டங்ஸ்டன் கனிம வளங்கள் ஏலம் எடுக்கப்படுவதாக இருந்த அந்தச் செய்தியைக் கேட்ட அப் பகுதி மக்கள் ஒரு வாரத்திற்கு மேலாக தூக்கமின்றி மன உளச்சலில் இருப்பதாக அவரிடம் தெரிவித்தார்கள். அப்பகுதி வளம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு அரிய பகுதியை இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு சிறப்பான பாரம்பரிய பண்பாட்டு சூழலியல் மண்டலமாக உள்ளது.

எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதியும் தமிழ்நாட்டின் நலன் கருதியும்  அப்பகுதி பாரம்பரிய பல்லுயிர் சூழலியல் மண்டலமாகவே பாதுகாக்கப்பட வேண்டும் வேறு எந்த தனியார் நிறுவனங்களோ வேறு தனிநபரோ அங்கு உள்ள கனிம வளங்களை வாழிட உயிர்களுக்கு எதிராக வளங்கள் சுரண்டப்படுதல் தடுக்கப்பட வேண்டும்என்பதை அரசின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts