சான்றிதழின் மகிமை”
(சுய கற்றல் வெற்றி கதை).
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், கூந்தன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

சமீபத்தில், எங்கள் பள்ளியில் சுயகற்றல் குழுவின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு சிறப்பான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்தச் சான்றிதழ்களை பெற்றோர்களுக்கு குழந்தைகளின் முன்னிலையில் கௌரவமாக வழங்கினோம்.
பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் அந்த சான்றிதழ்களை பெற்றபோது, அவர்கள் முகத்தில் தெரிந்த அந்த பெருமிதம் மட்டுமே அவர்களது ஆழமான பங்களிப்பை நமக்கு உணர்த்தியது.
இந்த நிகழ்வின் புகைப்படங்களை எடுத்து, சுயகற்றல் குழுவின் புலனம் குழுவில் பகிர்ந்தேன். அதை பார்த்த உடனே, நமது திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் பாராட்டினார்கள்.
அவர்களின் வாழ்த்துக்கள் எங்கள் பள்ளிக்கும், சுயகற்றல் குழுவின் செயல் சார்ந்த மேம்பாட்டுக்கும் மிகுந்த உற்சாகம் அளித்தது.
இந்நிகழ்வு இவ்வளவிலேயே முடிந்து விட்டது என்று நான் கருதினேன்.
ஆனால், இரண்டு நாட்கள் கழித்து ஒரு அரிய சந்தர்ப்பம் வந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் என் நண்பர் Dr. காட்வின் பிரபாகரன் என்னை தொடர்பு கொண்டு, அந்த நிகழ்வின் புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். நான் அவரிடம், “இந்த புகைப்படங்கள் உங்களிடம் எப்படி வந்தது?” என ஆச்சரியமாகக் கேட்டேன்.
அதற்கு அவர், “ உங்கள் பள்ளி மாணவனின் தந்தையார், அவர் என்னுடைய பழக்கமான பேருந்து நடத்துனர். அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நிகழ்ச்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அவர் உற்சாகமாக ‘என் மகன் படிக்கும் பள்ளியில் பெற்றோருக்கே சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மகிழ்ச்சியில் நான் உங்களுக்குப் புகைப்படத்தை அனுப்பினேன்,” என்றார் பேராசிரியர்.
இந்தச் சம்பவம் என்னை மட்டுமல்ல, என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் மிகுந்த ஊக்கத்தை அளித்தது.
சுய கற்றல் முயற்சிகள் வெகு விரைவில் எங்கள் பள்ளி குழந்தைகளின் கற்றல் உயர்வுக்குக் கொண்டு செல்லும் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.
நன்றி.
சி.க. சங்கரநாராயணன்
கணித பட்டதாரி ஆசிரியர்,
அரசு நடுநிலைப்பள்ளி, கூந்தன்குளம்,
நாங்குநேரி ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம்.
10.01.2025.














