
கடந்த 12/01/2025 ஆம் நாள் மலேசியா சிலாங்கூர் மாநில, கோல்பீல் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையும் பாரதியார் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
அதே வேளை 97 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் முதன்முறையாகப் பள்ளிப்பண் எழுதி இசையமைக்கப் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விழா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டது. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு , தமிழியல் சிந்தனையாளர் ஐயா கலைச்செல்வன் அவர்கள் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
இவ்விழாவுக்கு, சிலாங்கூர் மாநில கல்வித் திணைக்கள மொழி அதிகாரி செங்குட்டுவன் அவர்களும், மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகத் தேசியத் தலைவர் பாண்டியன் அவர்களும் , பள்ளி வாரியத் தலைவர் பிரான்சிசு அவர்களும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் , ஐயா செங்குட்டுவன் அவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இரா. மகேசுவரன் அவர்களும் நானும் உரை நிகழ்த்தினோம் . பள்ளிப்பண் என் கைவண்ணத்தில் எழுதப்பட்டதால் அது குறித்த விளக்கத்தை நான் வழங்கினேன்.

திருக்குறள் பயன் மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி
எடுப்பு
வாழ்க! வாழ்க வாழ்கவே !
கோல்பீல் தமிழ்ப்பள்ளி வாழ்கவே!
தொடுப்பு
வளம்பல பெற்றே யாங்கணும்
வண்டமிழ் சிறந்திட வாழ்கவே!
கண்ணிகள்
அறிவியல் தொழில் நுட்பக் கணிதத்தில்
பொறியியல் கணினி செய்யறிவு
பாடங்கள் யாவிலும் சிறந்திடும்
நாடெலாம் போற்றிட ஓங்கிடும்
(வாழ்க)
மனநலம் உடல்நலம் உயர்நெறி
இனநலம் பேணிடும் மாணவர்
ஆக்கிடும் எங்கள் பள்ளியே
ஊக்கிடும் வெற்றிகள் தேடியே!
(வாழ்க)
இரா. திருமாவளவன்.














